Thursday, May 24, 2012

பெரு வாழ்வு

-------------------- 



அயல்நாட்டில் உழைத்து சேர்த்த
சிறுவாடு பெரும்பணம்
தண்ணீராய் செலவழிந்தும்
உள்ளாட்சி தேர்தலில்
மண்ணை கவ்வியதால்
மனமுடைந்தவோர்
மதுப் புட்டி கயிற்றிலாடியது.

------------------------------------------------- 

நேற்றிரவு வரை
வீட்டுக்குதவா பெரும்குடிகேடன்
அதிகாலை குளித்து முடித்து
ஐயப்பசாமி அவதாரமெடுத்தான்.
பக்தகோடிகள் பாதம் பணிந்தனர்.
-------------------------------------------------- 

புற அழுத்தம் அதிகரித்தால்
வெடித்து சிதறும் மிதிவெடி நான்.
அழுத்தத்தையும் பிரயோகித்து
எனது இயல்பையும்
குறை கூறுவதென்பது
என்னை சிதறடிப்பதை விடவும்
கொடுமையானது.
-------------------------------------------------- 

அடிதடி கை கலப்பில்
காவல் நிலையம்
பஞ்சாயத்திற்கு வந்த பகையாளிகள்
சமாதானம் அடைந்தனர்.
பேரம் படியாததால்
காவல் ஆய்வாளர் தான்
சமாதானம் அடைந்தனர்.
----------------------------------------------------- 

எது நடந்ததோ
அது மிகு கொடூரமாக
மனித உரிமை மீறல்களாக நடந்தது.
எது நடக்கிறதோ
அது வெகு திட்டமிடலோடு
நேர்த்தியாக நடக்கிறது.
எது நடக்குமோ
அது கால தாமதமாக என்றாலும்
ஓர்நாள் நடக்கும்.
அது நிச்சயம் கிடைக்கும்.
-------------------------------------------------------- 

வேலைவாய்ப்பு அழைப்பு
வரும் வேளைகுழிக்குள் சென்று
படுத்துக் கொண்டால்
அதற்கெல்லாம்
அரசு பொறுப்பாக முடியாது.
------------------------------------------------- 

தன் தேவையைகூட தானே
பூர்த்தி செய்ய இயலாத கடவுளா
கோவில்களில் நிரம்பி வழியும்
மடமைகளின் தேவையை
பூர்த்தி செய்யப் போகிறான்?
------------------------------------------------- 

ஆயுதமில்லா உலகை
நிறுவவதாக சொன்னவன்
ஆயுதபூசையை கோலாகாலமாக 
கொண்டாடுகிறான்.
--------------------------------------------------- 

புதிய கட்டிடத்தில்
லாபம் என்றெழுதி துவக்கப்பட்ட
காவல் நிலையம்
வசூலை வாரிக் குவிக்குமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-------------------------------------------------------------- 

பிழைப்பின் நிமித்தம்
பிறந்த நிலத்திலிருந்து
வேருடன் பிடுங்கி
வேற்று நிலத்தில் நடப்பட்டவர்கள் குறித்த
பிரதிபலன் எதிர்பாராத
உமது
விசாரிப்புகள்,
கரிசனங்கள்,
தேடல்கள்
விலை மதிப்பற்றவை.
------------------------------------------------------------------ 

பகுத்தறிவு பகலவனை
தலைவன் என்ற ஒரு வாக்குப் பொறுக்கி
வளர்பிறை நாளில்
நல்ல நேரம் பார்த்து
புரோகிதம் முழங்க 
தன் புதியக் கட்சியை துவங்கினான்.
------------------------------------------------------------

சாமியக் கும்புட்டவனுக்கும் தொல்லை.
சாமியக் கும்புடாதவனுக்கும் தொல்லை.
ஆளை விடுங்கடா சாமி!
------------------------------------------------------------ 

அரசியல் செய்ய விடயமேதும்
இல்லாத நிலையில்
எதற்கும் இருக்கட்டுமென
ஈழத்தமிழர் நலன் குறித்து
கவலைப் படுகின்றன அற்ப பதர்கள்.
------------------------------------------------------- 

அயோக்கியன் என்று
ஒப்புக் கொண்டதாலேயே
அவனை நல்லவனென்று
நம்பி விடாதீர்கள்!
--------------------------------------- 

தீவிரவாதம் என்பது
நிகழ்காலத்தை மட்டும்
பணயம் வைத்து
எதிர்காலத்தைக் கட்டமைக்கும்.
அரச பயங்கரவாதமோ
எல்லா காலத்தையும்
நிர்மூலமாக்கும்.
-------------------------------------------------- 

அயோக்கியன் தன் அன்றாடப் பணியை
கடவுளுக்கு தீபாரதனையோடு துவங்குகிறான்.
அலைபேசியின் அழைப்புக்குரலாக
கடவுளின் பாடல்களே ஒலிக்கின்றன.
பதப்படுத்தப்பட்ட பசுந்தோலும்
பன்னீரில் தோய்த்த நீறும்,
சந்தனமும், சவ்வாதும்
அவனுடைய தோற்றத்திற்கு
மேலும் மெருகூட்டுவதால்
அவனே ஓர்நாள் கடவுளாகிறான்.
அப்புறம் ஓர்நாள்
கடவுள் அகதியாகிறான்.
----------------------------------------------------------













Saturday, May 19, 2012

ஓரங்க நாடகமும், பலியாடுகளும்.

---------------------------------------------------------------------------------------------------------------------- 

   




எல்லோராலும் 
கைவிடப்பட்டதொரு தேசத்திற்கு
அபத்த நாடகத்தின்
அடுத்த காட்சியாய்
அவர்கள் சென்றார்கள்.

அங்கு பலிகளின் திருவிழாவை
வெற்றிகரமாய் நிகழ்த்தியிருந்த
கசாப்புக்காரனோடு கை குலுக்கினார்கள்.

அவனோடு விருந்துண்ண அமர்ந்தவர்கள்
கேட்பாரற்று கொட்டடியில் வாடும்
பலியாடுகளை ஒசைஎழாமல்
கழுத்தருப்பதைக் கற்றுத் தரச் சொன்னார்கள்.

மேனியெங்கும் தெறித்து வழிந்த
குருதி சிதறல்களை
வழித்தெரிந்தவனின் ஏளனச் சிரிப்பு
சனநாயகத்தை விட
சிறந்தக் கழுத்தறுப்பு
வேறென்ன இருக்கிறது
என்பதைப் போலிருந்தது.

வனங்களில்
தன்னியல்பாக சுற்றி திரியும்
ஆடுகளைப் பிடித்து அறுக்கையில்
முகத்தில் பீய்ச்சியடிக்கும் குருதி
நெஞ்சை உறையச் செய்யுமெனவும்
அதற்கடுத்தடுத்த அறுப்புகள் எல்லாம்
பழகி விடுமெனவும்,

அறுப்பைத் தொழிலாகக் கொண்டவன்
குட்டி ஆடுகள்
குட்டியை வயிற்றில் சுமக்கும் ஆடுகள்
வயது முதிர்ந்த ஆடுகளென
பேதம் பார்க்கக் கூடாதெனவும்,

ஆடுகளை அறுக்காமல்
அனுதாபத்துடன் வேடிக்கைப் பார்ப்பது
ஆடுகள் பெருகி
உயிர்ச்சமநிலை குலைந்து
மனிதர்களின் இருப்பைக்
கேள்விக்குள்ளாக்கும் எனவும்,

அறுபட்ட ஆடுகள் தவிர்த்து
அகப்பட்ட ஆடுகளனைத்தையும்
கை காலுடைத்து
பட்டினியில் உழல வைத்து
முள்வேலிக்குள் அடைக்கையில்
தானாகவே வழிக்கு வருமெனவும்,

வழியும் பசியும் மிகுந்து
எழும்பும் ஆடுகளின் கதறல்களை
பொருட்படுத்தத் தேவையில்லை எனவும்
ஆடுகளின் படைப்பே
அறுப்பதற்குத் தானெனவும்,

தன் வெற்றி இரகசியத்தை
பெரும் கர்ச்சிப்போடு விவரித்தான்.

ஆடுகள் புதையுண்ட தேசத்தின்
மயானங்கள் எல்லாம்
அழகு மிளிர்வதாக சிலாகித்தார்கள்.

புதையுண்ட ஆடுகளை தோண்டியெடுத்து
முன்னமே முடிவு செய்து வைத்திருந்த
கேள்விக் கணைகளை தொடுத்ததாகவும்,

கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்கத்துடன்
தேசம் திரும்பிய நடிகர்கள்
பன்றிகளின் தொழுவத்தில் நின்று
வசிக்க வனமோ,
புசிக்க மேய்ச்சல் நிலமோ
தேவையில்லை என்பதே
ஆடுகளின் பெரு விருப்பென்றார்கள்.

ஓரங்க நாடகத்தின்
திருப்புமுனைக் காட்சியை
கூற்றுவனான கசாப்புக்காரனும்,
ஓரங்க நாடகத்தில் நடித்தவர்களும்,
ஓரங்க நாடகத்தை நடத்தியவர்களும்,
எஞ்சிய சிலரும் ரசித்தார்கள்.

எனினும்,
எதிர்பார்த்ததைப் போலன்றி
அவ் ஓரங்க நாடகம் அபத்த நாடகமென
பார்வையாளர்களால் புறந்தள்ளப்பட்டதையும்
அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

ஆடுகளின் மீதான
அவர்களின் கரிசனங்களும்,
கண்ணீரும் போலியானவை என
ஆடுகளும் அறிந்திருந்தன.
---------------------------------------------------------------------    














  

Friday, May 18, 2012

உலகம் அழித்த அவல குறியீடு முள்ளிவாய்க்கால்








உலகம் அழித்த அவல குறியீடு முள்ளிவாய்க்கால்



காற்றையும் களவாடி 
கந்தகப் பொஸ்பரசுகளால் 
சுவாசத்தையும் நிறுத்திய
பிணக்காடே இந்த முள்ளி வாய்க்கால்












Blogger Widgets