Saturday, March 17, 2012

நான் எதுவும் சொள்ளபோவதில்லை ... - II






பஞ்சாங்கம், 
சோதிடம், 
வெற்றி பலன்கள் , 
மனையடிச் சாத்திரங்கள், 
கோலப் புத்தகங்கள் வாங்க 
முண்டியடிக்கும் கும்பலில்  
நெரிபடவே வாய்த்திருக்கிறது
இலக்கிய ஆர்வலர்களுக்கு. 
----------------------------------------------------

வயிற்றுப் பசிக்கு 
திசைகளுமில்லை. 
எல்லைகளுமில்லை. 
------------------------------

ஆண்டி ஹீரோக்கள் 
ஆயுள் முழுக்க காதலிக்கிறார்கள். 
--------------------------------------------------- 

பிப்ரவரி - 14 மட்டும்  
வாலன்டினுடைய  நாள். 
பிற நாட்களெல்லாம் 
என்னுடைய நாள். 
----------------------------------- 

சூதாடிகளுக்கும் 
குடிகேடர்களுக்கும் 
குடும்பம் இருப்பது போலவே தெரிகிறது. 
-------------------------------------------------------------  

குடிகளின் வாழ்வுரிமைப் போராட்டங்களை  
அரசுகள் சட்டம்-ஒழுங்கு என்று   
அணுகுவதாலேயே பிரச்சினைகள்   
மைய நீரோட்டம் நோக்கி நகர்கின்றன. 









Wednesday, March 14, 2012

நான் எதுவும் சொல்லப் போவதில்லை...! - I






எல்லோராலும் கைவிடப்பட்டதொரு தேசத்தில் 
வாழ்வோமென்ற நம்பிக்கையையும், 
வாழ்ந்தோம் என்ற  நினைவுகளையும் கைவிடாமல் 
சிலுவை சுமக்கும் இயேசுவாய்
சுமந்து அலைந்து திரிவது
இறையாண்மை மீறலெனில், 
அதைத் தொடர்வது 
நமது சனநாயகக் கடமையாகிறது. 
                  -------------
காதலர் தினத்தில் 
உன்னிடம் கையளிக்க 
என்னிடம் ஏதொன்றுமில்லை 
காதலைத் தவிர. 
                  -------------
உள்ளே வெளியே ஆட்டத்திற்கு 
நான் தயார் இப்போது. 
அதிகாரம் வலியுறுத்தும் 
கொடும் சனநாயகச் சட்டங்களின் 
சட்டகங்களுக்குள் நின்று 
வசந்தத்தின் இடி முழக்கமென முழங்குவேன். 
அதிகாரத்தின் உறக்கம் கலைக்கும் 
கொடும் கனவென நானிருப்பேன். 
                    ---------------
மனுசன் கும்புடறதுக்கும் சாப்புடறதுக்கும் 
ஆயிரம் கண்டு புடிச்சிருக்கான். 
வயித்துக்கு வழி செய்யுற 
விவசாயத்தைக் காக்குறதுக்கு தான் 
ஒரு மயிரையும் 
கண்டு புடிக்க மாட்டேங்கறான். 
                  ---------------
நான் நல்லவனாகவோ, 
கெட்டவனாகவோ மாறுவது  
என் கையில் ஒன்றுமில்லை. 
எல்லாம் வல்ல மக்கள் நல அரசின் 
கையில் தானிருக்கிறது. 
                 -------------
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் 
தப்பியதே மனுசனுக்கு. 
சிங்களப் பேரினவாதத்துக்கு 
தப்பியதே தமிழீழத்துக்கு. 
                ------------
தாஜ்மகால் ஒன்றும் உலக அதிசயமில்லை. 
தாஜ்மகாலை நான் காண நேர்ந்தது தான் 
உலக அதிசயம். 
               -------------
புகை வண்டியில் 
நடந்தே சாக முடிவெடுத்தவர்களை
காப்பாற்ற முடியாது போலிருக்கிறது. 
             -------------
புகைவண்டி நிலையத்தில் 
இருக்கைகள் அமர்ந்துகொண்டும்
மனிதர்கள் நின்று கொண்டும் 
புகை வண்டிக்காகக் காத்திருக்கிறார்கள். 
              -----------
பழுதடைந்த தள்ளுவண்டியில் 
பழுதில்லாமல் ஓடுகிறது வாழ்க்கை. 
              ----------
கையில் காசில்லாமல் 
காய்ந்து நிற்கையில் தான் 
கோவில் திருவிழா 
களை கட்டும் போலிருக்கிறது.
                ----------
நாட்டுக்காகவும், 
நாட்டு மக்களுக்காகவும், 
தங்கள் இன்னுயிரை கொடுப்பேன் என்று 
சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்   
தமிழக மீனவர் படுகொலை, 
தமிழீழப் படுகொலை, 
மூன்று தமிழருக்கு தூக்கு, 
முல்லை பெரியாறு, 
தண்டகாரன்யப் படுகொலை என்று 
எங்கள் உயிரை எடுக்கத் தானே 
திட்டமிடுகிறார்கள்? 





Monday, March 12, 2012

நான் எதுவும் சொல்லப் போவதில்லை!....


 -------------------------------------------------------------------------- 






இந்தியா ஒளிர்கிறதா? 
இந்தியா ஒழிகிறதா? 
நன்றாகக் கேட்டுச் சொல்லுங்கள்! 
சரியாகக் கேட்கவுமில்லை.
சரியாகத் தோன்றவுமில்லை. 
                  ------------
அதிகாரத்திலிருப்போனை
கால் நக்கிப் பிழைப்பது 
உங்களுக்குப் பிடித்திருக்கிறது!? 
உங்களை விட தேசப் பற்றாளன் 
புவிதனில் எவருமில்லை என்கிறான் 
கார்பொரேட் காந்தி.
                 ------------ 
புலம் பெயர் தமிழனே! 
உங்களின் போர் முழக்கத்தில் 
புலங்களின் மனசாட்சி 
பெயர்ந்து போகட்டும்! 
                -------------
காந்திகள் மக்களுக்கு 
குல்லா போடுகிறார்கள். 
                -------------
பூ விற்பவனின் வாழ்க்கை
மணப்பதற்கு பதில் 
நாறுவது எப்படி? 
                --------------

Blogger Widgets