குழந்தையுடன் தாய்
தற்கொலை செய்தியை
கேள்வியுற்ற ஏனைய கணவன்மார்கள்
தத்தம் மனைவிகளுடன்
அலைபேசியில்
அன்புமழை பொழிகிறார்கள்.
------------------------------
கொஞ்சம் காகிதங்களையும்
நிறைய எழுத்துக்களையும்
அடுத்த தலைமுறைக்கு
கையளிக்கவிருக்கும்
என்னை என் பிள்ளை
எப்படி எதிர்கொள்வானோ?
------------------------------
உயிரையும் (அ),
மெய்யையும் (ம்)
கொடுத்தவள்
உயிர்மெய்யாகி (மா)
நிற்கிறாள்.
------------------------------
மக்களாட்சி ஈன்றெடுத்த மன்னர்களே!
நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால்
நாங்கள் பிழைத்து விடுவோம்.
நல்லது செய்கிறேன் பேர்வழியென
நீங்கள் கிளம்புவது தான்
வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
------------------------------
கழனிக்கு சென்றிருந்த
அம்மாக்களின் வருகைக்காக
காத்திருந்த பிள்ளைகள்
எல்லாம் வளர்ந்து,
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்
பிள்ளைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
------------------------------
No comments:
Post a Comment