Saturday, August 18, 2012

தன்மான தலைவர் ....


திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தா
ர். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர்.

இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை. உடனே காரை நிறுத்திய வைகோ, காரை விட்டு இறங்கி, வலியால் துடித்துக் கொண்டிருந்த இருவரையும், மோதிய வேனிலேயே ஏற்றி, முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். கட்சியினர் இருவரையும் உடன் அனுப்பி, தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.

விபத்தில் சிக்கிய இளைஞர்கள் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டைச் சேர்ந்த மருதுபாண்டி,24, முனியாண்டிசாமி,24, என்பவராவர். மதுரைக்கு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வைகோ இளைஞர்களை காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 

Friday, August 10, 2012

துரோக நாடகம் ( டெசோ மாநாடு )




உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.
வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
இருப்பது ஓருயிர்.
போவது ஒருமுறை.
அது தமிழுக்காக போகட்டுமென்று
வாயால் வடை சுடுவார். 


ஊழலின் ஊற்றுக் கண்ணென 
அவரை உண்மைச் சுடுமானால், 
மீண்டுமோர் 
ஆரிய, திராவிடப் போர்  மூளும். 
இது 
அடிமைச் சாதியை ஒடுக்கும் 
ஆதிக்க சாதியின் கொடும்சதி என்பார். 

இன விடுதலைக்கு ஈகம் செய்த 
சித்தாந்தப் புலியின் சிகிச்சைக்கு மறுத்து   
மனிதத்தைக் குழி தோண்டிப் புதைப்பார். 

எம் சமாதான முகத்தை 
பேரினவாதி சிதறடிக்கையில் 
கவியெழுதி முதலைக் கண்ணீர் விடுவார். 
அச் செயலை இனப்பற்றாளர் செய்தால் 
பயங்கரவாதமென்று பதறித் துடிப்பார். 

தம் வீட்டிற்குள் நிகழும் 
ரத்த உறவுகளின் அதிகாரச் சமரை 
தீர்க்கும் திராணியற்றவர்   
விடுதலைப் போராளிகளை 
சகோதரச் சமரால் வீழ்ந்தவர் என்பார். 

பகுத்தறிவுப் பாசறையெனப் பறைசாற்றுபவர்
எப்போதும் மஞ்சள் தூண்டிற்குள்  
முகம் புதைத்திருப்பார். 

வயிற்றுப் பிழைப்புக்கு 
வல்லம் வலிப்போரை 
பேராசை நடுக்கடலுக்குள் 
மூழ்கடிக்கிறது என்பார். 

வர்த்தக ஒப்பந்தமெனக் கூறி 
அந்நியத் தேயிலையை இறக்கி   
தம் சனங்களின் வயிற்றிலடிப்பார். 

நாடகமேடையில் வாழ்வைத் துவக்கியவர் 
உலகின் கவனம் ஈர்த்த உண்ணாநிலையையும் 
நாடக மேடையேற்றி நாறடிப்பார். 

உலோகப் பறவைகள் உமிழ்ந்த எச்சத்தில் 
தம்மினம் கருகி சிதைகையில் 
தம்மினத்தை தானே 
விழுங்கும் அரவம் போலிருந்து 
மழைவிட்டும் தூவானம் விடவில்லையென  
இலக்கிய நயம் பாராட்டுவார். 

கருவறை சிசுவும் 
முள்வேலிக்குள் முடங்குகையில் 
இன்பச் சுற்றுலா சென்று பார்த்து 
கிளிகள் தங்கக் கூண்டிலிருப்பதாக அறைகூவுவார். 

முள்ளிவாய்க்கால் குருதிப்புனலில் நனைகையில்  
இரத்த உறவுகளுக்கு அமைச்சுப் பதவி பெற 
அதிகாரத்தின் காலடியில் ஒற்றைக்கால் தவமிருப்பார். 

தம் இனத்தைக் காவு கொடுத்து 
தவப்புதல்வி செய்த இமாலய ஊழலை  
சனங்கள் காறி உமிழ்ந்த எச்சிலில் நின்று 
"உங்களுக்கு ஒரு மகளிருந்து..." 
எனக் கண்ணீர் உகுப்பார். 

தமிழர் தாயகம் கிடைத்தால் மகிழ்ச்சி என்பார். 
அந்த இலட்சியத்திற்காக 
செயலாற்றுவோரை வேரறுப்பார். 
மந்திரம் ஓதி மாங்காய் பழுக்க வைப்பாரோ? 

கேட்ட இலாகா கிடைக்காதபோது 
ஆதரவை திரும்பப் பெறுவதாக மிரட்டுபவர், 
தம் இனக்கொலையை நிறுத்தக் கோரினால் 
ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு 
என்ன செய்ய முடியுமென தழு தழுப்பார். 

கைக்கெட்டும் தொலைவில் நிகழும் 
இரத்த வெறியாட்டைத் தடுக்காது 
கடவுளைப் போல வேடிக்கைப் பார்த்தவர் 
மலைபோலக் கடிதமெழுதி 
சனங்களை மாயச் செய்வார்.

உறவுக் கண்ணிகளை அறுத்தெறிந்தவர் 
மனிதச் சங்கிலி போராட்டம் என்பார்.  

ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கடி முற்றும்போது 
அனைத்துக் கட்சி கூட்டம் என்பார். 
போரை நிறுத்த வலியுறுத்தாது 
காயத்திற்கு மருந்தனுப்பினால் போதும் என்பார். 

தேச பக்தர்களின் இரட்டை நாவை 
வெளிச்சம் போட்டுக் காண்பிக்க 
தன்னையே திரியாக்கியவனின் 
இறுதி ஊர்வலத்தில் 
தடியடி நிகழ்த்தி கலைப்பார். 

தம் இனத்தை அழித்தொழிக்க 
அனைத்தையும் செய்து விட்டு  
"அய்யகோ! தமிழினம் அழிகிறதே!..." 
என்று அழுதரற்றுவார்.  

இன அழிப்பில் பலியானவன் 
கத்திக் கதறியது  
உயர்தனிச் செம்மொழியிலென  
இழவு வீட்டின் ஒப்பாரிப் பாடலுக்கு 
விருது கொடுத்துச் சிறப்பித்து 
செம்மொழிக் கொண்டானென 
தனக்குத் தானே பட்டம் சூடுவார். 

தன் குட்டிகளிருக்கும் திசைநடப்போரை 
மலம் தின்று செரிக்கும் பன்றிகளும், 
போக்கிடமற்ற தெருநாய்களும், 
கொப்பொடிக்க மரமேறுவோரை 
மந்திகளும், காகங்களும் 
ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கும். 

எட்டாவது அதிசயமாய் 
தம் இன அழிப்புக்கு எதிராக 
ஒன்று சேர்ந்த தமிழனை 
அடக்குமுறைச் சட்டமேவி 
சிறைக்கொட்டடியிலடைத்து மகிழ்வார். 

அரிதாரம் கலைந்த வெட்கமற்று 
அதிகாரம் முழுதும் தொலைத்த பின் 
அங்கத நாடகத்தின் 
அடுத்த காட்சியாய் 

குருதி படிந்த நிலத்தில் 
சாம்பல் பூத்த தெருவில் 
சனங்களை திரளச் செய்ய   
டெசோ மாநாட்டை அறிவிப்பார்.  

சில முகங்களை சாகும்போதும் 
பார்க்கத் தோன்றும். 
சில முகங்களை பார்க்கும்போதெல்லாம் 
சாகத் தோன்றும். 

வரலாற்றின் வழித் தடத்தில் 
எதிரிகள் மன்னிக்கப்படுகிறார்கள். 
ஆனால், 
துரோகிகள் மன்னிக்கப்படுவதில்லை. 
--------------------------------------------------------------------------






Wednesday, August 1, 2012

கவலை

------------- 

அன்றாடம் வீட்டுப் பாடமெழுதி
விரல் நோகும் சின்னக்குட்டி
எப்போதுமே வீட்டுப் பாடமெழுதாத
பெற்றோரைக் கண்டு
பொறாமைப் படுகிறாள். 
--------------------------------------------------------------

பல்லக்குத் தூக்கிகளே!
எந்த அடக்குமுறைக்கும்
அஞ்ச மாட்டோமென
மாநாட்டுப் பந்தலில் 
வீர முழக்கமிடுபவன் 
மூட்டைகடியிலும்,
மூத்திர நாற்றத்திலும்
முடங்கப் போவதில்லை.
நினைவிருக்கட்டும்! 
--------------------------------------









Monday, July 23, 2012

கவிதை செய்!


 


 










 மருத்துவ பரிசோதனைக்கு
வந்த ஏனையோர்
மருத்துவர் என்ன சொல்லி விடுவாரோ
என்ற பயத்திலேயே
பாதி இறந்து விடுகின்றனர்.

------------------------------

--------------------------------------

ஹார்ட்  அட்டாக்கில்  மீண்டவன்
சிகிச்சைக் கட்டணத்தைக் கேள்வியுற்று
ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தான்.
-------------------------------------------------------------

குடித்து விட்டு தகராறு செய்தவனை
மிக வன்மையாக
கண்டித்துக் கொண்டிருக்கிறான்
குடிநோயாளி.
-------------------------------------------------------

மருத்துவ மனையில் நோயாளியை
கவனித்துக் கொள்ள வந்தவன்
மன நோயாளியானான்.
-------------------------------------------------------

விபத்தில் இறந்தவனை
சற்று முன் தான்
பார்த்துப் பேசியதாக சொல்லியே
உயிரோடிருப்பவர்களை
கொன்று விடுகிறார்கள்.
--------------------------------------------------

அந்த நால்வரும்
உடன் வரப் போவதில்லை.
பணமில்லாதவர்
தான் வெட்டிய குழியில்
தானே சென்று படுக்கக் கடவீர்.
------------------------------------------------

இன்று
ஒடுக்கப்பட்டோரின்
மிக வலிமையான ஆயுதமாக
அழுது வீங்கிய கண்கள் மட்டுமே இருக்கின்றன.
எப்போதும் அவ்வாறே இருக்க முடியாது.
---------------------------------------------------------------------- 

நிலாவைக் காட்டி
குழந்தைக்கு சோறூட்டியவர்கள்
இன்று
நடிகனைக் காட்டி
பொருளீட்டுகிறார்கள்.
------------------------------------------------ 

கண்களை மூடி
கடவுளை நிந்தித்து
அணிகலனை பறிகொடுத்தவள்,
கடவுளிடம் முறையிட்டாள்.
எப்போதும் போலவே
கடவுள் சிரித்துக் கொண்டிருந்தார்.
---------------------------------------------------

இலவசத்தை ஏற்கிற சபலத்தை
மாற்றுப் பெயரில்
பிச்சை யென்றும்  சொல்லலாம்.
-----------------------------------------------

சாராயத்தை நிறுத்தியவனை
அடுத்த தடவை பார்த்த போது
வெண் சுருட்டு பிடிக்கப் பழகியிருந்தான்.

வெண்சுருட்டை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்தபோது
பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தான்.

பாக்குக் குதப்புவதை நிறுத்தியவனை
அடுத்த தடவைப் பார்த்த போது
புகையிலையை திணித்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் எல்லோருமாக சேர்ந்து
நம் மூச்சைத் தான்
நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது.
-------------------------------------------------------------------

மழைக் கஞ்சி எடுப்பாரும்
மழைக் கஞ்சி பிழைப்பாரும்
ஒரு தராசின்
இரு தட்டுகளென
நிறுத்துப் பார்க்கிறது வாழ்க்கை. 
-----------------------------------------------

மனைவியை சந்தேகித்தவனையும்,
ஒருத்தியை பெண்டாண்ட ஐவரையும்,
மனைவியை அடகு வைத்து சூதாடியவர்களையும்,
கோபியர்களிடம் வரம்பு மீறுபவனையும்,
தீராக் காமத்தோடு
பிறன் மனையாளை நோக்குபவனையும்,
அறுபதினாயிரம் மனைவிகளைக் கொண்டவனையும்
கொண்டாடுகிற சமூகம்,
அதே செயலை
நீயும், நானும் செய்தால்
ஒப்புக்கொள்ளுமா?
---------------------------------------------------------------------------------

ஓவாப் பிணியை,
உறுபசியை,
சமூக அவலங்களை,
அரசியல் தின்று செரித்த சனங்களின் வாழ்வை,
இயற்கையின் பேரனர்த்தங்களை,
எம் அபிலாசைகளை நிர்மூலமாக்கும்
அந்நியத் தலையீட்டை,
இன ஒடுக்குமுறையை,
போர் பிய்த்தெறிந்த எம் கனவுகளை
பாடாமல்
காதலின் கொண்டாட்ட மனநிலையையும்,
இழப்பின் வலிகளையும்,
இயற்கையின் தரிசனங்களையும் மட்டுமே
பாடுதல் கவியாகுமோ?

கவிதை என்பது எம் மொழி.
கவிதை என்பது எம் வாழ்வு.
கவிதை என்பது எம் போர்முரசு.
கவிதை என்பது எம் போர்வாள்.
கவிதை என்பது எம் கேடயம்.
கவிதை என்பது எம் காலக்கண்ணாடி.

உலகெங்கும் சிதறிக் கிடக்கும்
எம் சனங்களை இணைக்கும்
இணைப்புக் கண்ணி.

யாம் அன்றாடம்
எதிர்கொள்ளும் அவலங்களை
உலகத்தோரிடம் கொண்டு சேர்க்கும்
தொடர்பு ஊடகம்.

இப்போது நீங்களும் கவி நெய்யலாம்.

Thursday, July 19, 2012

தூக்கு கயிறு




புதிய சட்டங்கள் அமலாகுமுன் 
மாற்றுக் கருத்துக்களுக்கு 
மதிப்பளிக்கும் சனநாயகம் 
ரோம் செனட்டில் இருந்தது. 

மாற்றுக் கருத்தாளர்கள் 
தங்கள் முன்னிருக்கும் 
மேசையின் மீதேறி நின்று 
தலைக்கு மேலாக தொங்கும் 
சுருக்குக் கயிற்றில் 
கழுத்தை நுழைத்துக் கொண்டு 
தங்கள் கருத்தை 
சபையில் முன் வைப்பார்கள். 

சபையோர் ஏற்றுக் கொண்டால் 
கயிறு அகற்றப்படும். 

சபையோர் ஏற்க மறுத்தால் 
மேசை அகற்றப்படும். 

உலக வரைபடத்தில் 
மற்றுமோர் ரோம் 
தன்னைத் தானே 
வரைந்து கொண்டிருக்கிறது. 







Wednesday, July 18, 2012

தவசி

------------------- 

கானல் அலையடிக்கும் வேகாத வெயிலுல
காலுல செருப்பில்லாம
காத்துல கைகளை வீசி
எட்டு மேல எட்டு வச்சி
பூமியோட நடுவகிடுல பேனைப் போல
ஊர்ந்து போவா பெரிச்சி கிழவி. 


இட்டேரிக் கரையெங்கும் 
உன்னி புதர்ச் செடியும், 
பிச்சிப் பூ வாசனையும், 
பனம்பழ வாசனையும், 
மஞ்சணத்தி மரத்துல 
தவுட்டுக் குருவிகளோட கெச்சட்டமும் 
கை புடிச்சு வழித் துணையா 
சக்கலாக் கரடு வரை வந்து போகும். 

சக்கலா கரட்டோரம் 
கொல்லிமலை பார்த்து விரிஞ்சிருக்கும் 
வாக்கப்பட்ட பூமியை 
குண்டாங்கல்லு மேல நின்னு 
கண்ணுக்கு மேல கைவச்சு நோட்டமிடுவா. 

சம்பா நெல்லு அறுவடை 
சக சோதியா தொடங்கியிருக்கும். 
பண்ணையாளு தவசி 
நெற் தாளுங்களை 
பாய்ஞ்சு பாய்ஞ்சு கட்டிட்டிருப்பான். 

தவசிக்கு வயிரம் பாய்ஞ்ச உடம்பு. 
கழனியிலிருக்கும் போது கோவணமும், 
பண்ணாடியைப் பார்க்க 
ஊருக்குள் வரும்போது 
இடுப்பில் வேட்டியும், 
தலையில் முண்டாசுமா வருவான். 
மேலாடையாக புழுதிப் பூத்திருக்கும்.
பக்கம் வரும்போது வியர்வை கசகசப்பு
புளிச்ச வாடை கொண்டு வரும். 


கழனிக்குப் போனாக்க 
தென்னை மரமேறி 
இளநீ போட்டு தாகமாத்துவான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
தீயில வாட்டி தின்னக் கொடுப்பான். 

பப்பாளிப் பழம் பறிச்சு 
பாளம், பாளமா கீத்திட்டு 
பசியாத்துவான். 

இடையிடையே 
நெல்லி, கொய்யா, கடலை, 
மாங்காய், தட்டக்காய், 
வெள்ளரிப் பழமுன்னு, 
வகை வகையாப் பறிச்சு வந்து  
தின்னுறதை வஞ்சையோடப் பார்த்திருப்பான். 

வேகாத வெயிலுல 
வெந்து தணியுறவன் 
தீவாளி, பொங்கலு, 
மாரியாத்தா நோம்பின்னா மட்டும் 
வெட்டி, துண்டு வேண்டி நிப்பான். 

பண்ணைக்காரிச்சி பேரனுங்க எல்லாம் 
வாடா, போடான்னுவாங்க. 
கிச்சு கிச்சு மூட்டுனாப்புல 
சிரிச்சே தான் கிடப்பானே ஒழிய 
கோவிக்கத் தெரியாது. 

அப்பா வயசு ஆளாச்சே, 
வாடா, போடான்னு சொல்லுறது 
தப்பில்லையான்னு கேட்டா, 
பள்ளு, பறைக்கு எல்லாம் 
பவிசு ஒண்ணும் தேவையில்லை. 
அப்புடித் தான் கூப்பிடனும்னு 
வியாக்கியானம் பேசுவா பெரிச்சி. 

அறுவடை முடிஞ்சு 
அடுக்கடுக்கா மூட்டையடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
ஊஞ்சலாடும் லாந்தரு வெளிச்சத்துல 
கோம்பை தடத்து சல்லி எல்லாம் 
நொறு நொறுங்க சாமமுன்னு பாராம 
சளைக்காம வந்து நிப்பான். 

மரவள்ளிக் கிழங்கு புடுங்கி 
நெறபாரம் ஏத்தி வச்சி 
ரெட்டை மாட்டு வண்டி பத்தி 
புதன்சந்தை போய் வருவான். 

பண்ணக்காரி வெறகு எரிக்க 
மரவள்ளிக் கிழங்கு குச்சியடுக்கி 
ரெட்டை மாட்டு வண்டியில 
கண்ணசந்து படுத்திடுவான். 

பழகுன தடத்து வழி 
பாவிப் பய மாடுங்க ரெண்டும் 
பாதி ராவுலயும் பதவிசா வந்து சேரும். 

காலுக்கு செருப்பாக 
உழைச்சு களைக்கிறவன் 
வீட்டுக்கு வெளியவே தான் 
ஒத்தக்காலு கொக்காக நின்னுருப்பான். 

தவசியை வீட்டுக்குள்ளப் பாக்குறது 
குதிருக்குள்ள 
மூட்டையடுக்கும்போது மட்டும் தான். 

"அம்மாயி, தவசி வீட்டுக்குள்ள வரான். 
இப்ப வீடு தீட்டாகாதா?"
பேரனுங்க கேட்கும்போது 
வெளக்க மாரெடுத்து வெரட்டுவா. 

கொண்டு வந்த மூட்டையெல்லாம் 
ஒத்தையாளா இறக்கி வச்சு 
ரொம்ப பசியா இருந்தாக்க, 
"பண்ணைக்காரிச்சி, 
ரெண்டு உருண்டை கம்மஞ்சோறு 
கரைச்சு ஊத்து ஆத்தா, 
வயிறெல்லாம் பத்துது"ம்பான். 

வெங்காயம் கடிச்சு 
வெறுங்கையால வாங்கி குடிச்சவன் 
வந்த சுவடே தெரியாம 
வண்டி பத்தி போயிடுவான். 

தாளறுப்பு, 
தாள் கட்டு சொமக்குறது, 
தாளடிப்பு, 
தாள தூத்தி வாருறது, 
சாணி மொழுகுன களத்துல 
நெல்மணிய பரத்தறதுன்னு 

தவசியும், 
தவசி பொண்டாட்டியும், 
மூணு பிள்ளைகளும் 
சொடுக்கிவிட்ட பம்பரமா 
சொழன்று சொழன்று வாருவாங்க. 

கானல் வெயிலுல 
காலுக்கு செருப்பில்லாம வந்ததுல 
வெந்துபோன பாதத்துக்கு 
கத்தாழைச் சோறெடுத்து கட்டி விடுவான். 

நெற்குவியல் பக்கத்துல 
கயித்துக் கட்டில போட்டு 
பெரிச்சி கிழவி தூங்குறப்ப, 
நெல்லுக் குத்தேறிப் பக்கத்துல 
வேட்டிய விரிச்சிப் போட்டு 
கண்ணயர்வான். 

முணுக்குன்னு சத்தம் கேட்டா 
கண்ணை முழிச்சுப் பார்த்து 
"ஊய்.. ஊய்..னு காத்துலக் கை வீசுவான். 

தூங்குன நேரம் தவிர்த்து 
எஞ்சுன நேரமெல்லாம் 
உழைச்சுக் களைப்பான். 

கதிரறுப்பு முடிஞ்சதுமே 
நெல் அளப்பு நடக்கையில 
பகலுல சூரியனாகவும், 
ராவுல சந்திரனாகவும் 
கழனியிலையே காஞ்சு கெடந்த 
புள்ளக்குட்டிக்காரனுக்கு 
ஒரு வல்லம் நெல்லுமணி சேர்த்தளக்க 
மனசில்லாதவ பெரிச்சி. 

வெயிற் காலத்துல தான் 
கெணறு ஈரமில்லாம வறண்டிருக்கும். 
பேரு பெத்த பெரிச்சிக்கோ 
மனசு எப்பவுமே வறண்டிருக்கும். 

பேரு பெத்த பெரிச்சிக்கு 
மனசெல்லாம் சாதியக் கட்டு. 

சந்தைக்குப் போய் வந்தாலே 
சனங்களைத் தொட்டுருப்போமுன்னு 
கூடையை திண்ணையில வச்சுட்டு 
தலையோட தண்ணி ஊத்தி 
தீட்டுக் கழுவி வீட்டுல நுழையுறவ, 
தவசி கொட்டகையிலையா 
சோத்துக் கஞ்சி குடிப்பா? 

"பண்ணைக்காரிச்சி நல்லாயிருந்தாத் தான் 
நாங்க எல்லாம் நல்லாயிருப்போம். 
கோவமிருக்குற எடத்துல தான் 
கொணமிருக்கும்"னு சொல்லுறவன் 
தான் கஞ்சிக் குடிச்சாலும், 
குடிக்காட்டினாலும், 

பெரிச்சிக் கிழவிக்கு பசியாற 
பெரிய தென்னை மரமேறி 
பிள்ளையாருக்கு அணிலைப் போல 
இளநீ சீவிக் கொடுக்குறப்ப, 
குடுக்கையில நிரம்பி வழியறது 
இந்த பள்ளனோட வியர்வை தான்னு 
ஒரத்து சொல்லத் தோணும். 

சொன்னா குடிக்காம வச்சிடுவான்னு 
எதுவும் சொல்லாம 
இளநீ குடிக்கிற பெரிச்சிய 
தாயைப் போல பார்த்திருப்பான். 

தன்னை வெட்டும் மனுசனுக்கும் 
நீரையே வார்க்கும் பாளைக்கு 
வேறொன்றும் தெரியாது













Friday, July 13, 2012

வினை

------------------------------  

சனங்களின் பிரச்சினைகளுக்காக 

சிறைக்குள் சென்றவர்கள் 
தத்தம் சொந்த பிரச்சினைகளில் 
மூழ்கிப் போயினர் . 

---------------------------------------------  

உன்னுடைய சொல்லை 
உண்மையென நம்பித்தான் 
உன்னை ஆதரித்தோம். 
உன் பின்னே அணிவகுத்தோம். 
உனக்கு வாக்களித்தோம். 

பிரதி பலனாக, 
என் மீது கிளர்ச்சியைத் திணித்தாய். 
ஏற்றுக் கொண்டு வினையாற்றியபோது, 
தற்காக்க நகங்களைக் கூர் தீட்டியபோது 
தீவிரவாதம் என்றாய். 
தீவிரவாதத்தை தூண்டிய நீயோ 
பாதுகாப்புடன் வலம் வருகிறாய். 

நீ முன்னமே தீர்மானித்திருந்த 
மோதல் சண்டையில் 
நான் உயிரிழந்தான பொய்யை  
கட்டவிழ்த்து விடுகிறாய். 

இறையாண்மைச் சாயம் 
பூசப் பட்டிருக்கும் பொய்யை 
என்னைப் போல் ஒருவன் 
பின்தொடருகிறான். 

உனது அடுத்த ஆட்டத்தை 
நீ துவங்கத் தொடங்குகிறாய். 
-----------------------------------------------------  















Thursday, July 12, 2012

தற்கொலை....
























குழந்தையுடன் தாய் 
தற்கொலை  செய்தியை 
கேள்வியுற்ற ஏனைய கணவன்மார்கள் 
தத்தம் மனைவிகளுடன் 
அலைபேசியில் 
அன்புமழை பொழிகிறார்கள். 
----------------------------------------------------------- 

கொஞ்சம் காகிதங்களையும் 
நிறைய எழுத்துக்களையும் 
அடுத்த தலைமுறைக்கு 
கையளிக்கவிருக்கும் 
என்னை என் பிள்ளை 
எப்படி எதிர்கொள்வானோ? 
-------------------------------------------- 

உயிரையும் (அ), 
மெய்யையும் (ம்) 
கொடுத்தவள் 
உயிர்மெய்யாகி (மா)  
நிற்கிறாள். 
-------------------------------- 

மக்களாட்சி ஈன்றெடுத்த மன்னர்களே! 
நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால் 
நாங்கள் பிழைத்து விடுவோம். 
நல்லது செய்கிறேன் பேர்வழியென 
நீங்கள் கிளம்புவது தான் 
வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 
------------------------------------------------------------ 

கழனிக்கு சென்றிருந்த 
அம்மாக்களின் வருகைக்காக 
காத்திருந்த பிள்ளைகள் 
எல்லாம் வளர்ந்து,  
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் 
பிள்ளைகளுக்காக காத்திருக்கிறார்கள். 
-----------------------------------------------------------













Sunday, July 8, 2012

நாளை தாக்குமா வைரஸ் ??? தப்பிக்க வழிகள்





       உலகெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில் இணைய தளம் மூலம் , டி.என்.எஸ் ..,எனப்படும் புதிய வைரஸ் நாளை தாக்க போவதாக தகவல்கள் வெளியாகின்றன .புதிய வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப , ஆன்- லைன் சோதனை வசதிகளும் அறிமுகமாகி உள்ளன

       டி .என் . எஸ் .,(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது இணைய தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ .பி ., எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது தற்போது டி.என்.எஸ் , சேஞ்சர் (அலுரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை செயலிழக்க செய்யும் நாச வேலையில்  வெளிநாடுகளை சேர்ந்த 7 பேர் ஈடுபட்டுள்ளதாக கடந்தாண்டு தகவல் பரவியது .
   
        இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , பாதிப்புகளை தவிர்க்க அமெரிக்கா உளவு பிரிவான எப்.பி. ஐ.., மாற்று சர்வர் நிறுவியது இந்த சர்வர் நிறுத்தப்பட உள்ளதால் , வைரஸ் நாளை (9 ம் தேதி )மீண்டும் பரவ துவங்கிவிடும் என தற்போது தகவல்கள் வெளியாகின்றன
    
        திறன் வாய்ந்த ‘ ஆண்டி வைரஸ்’ சாப்ட்வேர் இல்லாதவர்கள் , ஆன் – லைன் மூலம் , டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கண்டறிய புதிய வசதி அறிமுகமாகி உள்ளது
      
         கம்ப்யூட்டர்களில் ‘வைரஸ்’ பாதிப்பு உள்ளதா என கண்டறிய www.dns-ok.us என்ற தளத்துக்கு செல்ல வேண்டும் . தளத்தில் நுழைந்த உடன் பச்சை நிறத்தில் ஐபி ஓகே  என தென்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரில் டி.என்.எஸ் வைரஸ் தாக்கவில்லை . வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் , சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை தகவல் காணப்படும்
வைரசை அழிக்க
     
        சோதனையில் உங்கள் கம்ப்யூட்டரில் ‘வைரஸ்’ பாதித்திருப்பது உறுதியானால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி  செய்யவும் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது .
விண்டோஸ் XP, Vista,7 கணினிகளுக்கு
  
          டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கணினியில் இருந்து நீக்க பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான ‘அவிரா’ புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது ‘Avira DNS Repair என்ற லிங்க் மூலம் , மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்
  
        கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தால் இந்த மென்பொருள் இன்ஸ்டால் ஆகாது . ஒருவேளை பாதிகப்பட்டிருந்தால் வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்துவிடும் .
















Blogger Widgets