சில சமயங்களில்
திருடர்கள் கடவுளாகவும்
கடவுள்கள் திருடர்களாகவும்
காட்சியளிக்கிறார்கள்.
தேர்தல் திருடர்கள்
மக்களைக் காக்க
கடவுள் அவதாரம் எடுக்கிறார்கள்.
கோவிலில்
தஞ்சமடைந்த கடவுள்கள்
மக்களிடம் திருடி
பிச்சைப் பாத்திரம்
ஏந்த வைக்கிறார்கள்.
கடவுளின் கருணை தான்
உங்கள் பகல்களையும் இரவுகளையும்
இனிமை நிறைந்ததாக்குகிறது.
கடவுள்கள் வழங்கும் வாய்ப்புகளே
உங்கள் உறவுகளுடன்
நீங்கள் உறவாட
கால அவகாசத்தை வழங்குகின்றன.
தேர்தலில் யானை பலம் பெற்ற கடவுள்கள்
அவர்களின் சமகாலத்தில்
நீங்களும் வாழும் அரியதொரு வாய்ப்பை
உங்களுக்கு வழங்குகிறார்கள்.
அவர்களின் இரக்க உணர்வு
உங்களை நீண்ட நெடுங்காலம்
வாழ வழி வகுக்கிறது.
கடவுள்களை
கேள்விகளால் வேள்வி செய்தால்
தண்ணீரை விட இரத்தம் கெட்டியானது
என்பதை உணரும் வாய்ப்பையும்
வழங்கி மகிழ்கிறார்கள்.
------------------------------
2 comments:
adada alagu kavi
காவி வேட்டியவனையெல்லாம் கடவுளென நம்பினால் கடவுளைக்காணமுடியாது. கடவுளை தேடுவதில் மனிதர்களை கடவுளாக பாவிப்பதில் விலகியிருத்தல் நலம் . அழகான கவி
Post a Comment