Wednesday, June 20, 2012

சுதந்திர நாட்டின் அடிமை....

 ------------------------------------------------ 





சிறந்த அடிமைக்கான தேர்வில்
வெற்றிக்கனி பறித்தவன்
ரொட்டித் துண்டைக் கவ்வியவாறு
விசுவாசத்திற்கு வாலாட்டுகிறான்.

எசமானனைத் தவிர எல்லோரையும் கடிக்கிறான்.
உணவுக்காக மட்டும் வாயைத் திறக்கிறான்.
நாற்காலியில் அமர வைத்தோனின் பெருவிருப்பை
ஒரு பாலியல் தொழிலாளியைப் போல்
நிறைவேற்றுவதில் திருப்தி கொள்கிறான்.

அதிகாரத்திலிருக்கும் அயோக்கியன்
நீட்டும் கோப்புகளில் கேள்வியின்றி
கையொப்பம் செய்து முறுவளிக்கிறான்.
மக்கள் விரோத செயல்களை அங்கீகரிக்கிறான் .

ரோம் பற்றிஎரிந்தபோது
பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல்
கடும் நெருக்கடியில்
சனங்கள் சிக்கித் தவித்தபோதெல்லாம்
இன்ப சுற்றுலாவுக்காக விமானம் ஏறுகிறான்.

அவன் உயிரோடிருப்பதை
ஊடகங்களின் வழி அறியும்போது
பெயர் உச்சரிக்கவியலா தேசத்தின்
அதிபரோடு கை குலுக்குகிறான்.

இனப் படுகொலையாளனின் ரத்த விருந்தில்
சிறப்பு விருந்தினனாக கலந்து
அவனுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறான்.

சிறந்த அடிமையென மகுடம் சூடி
பிறவிப் பயனடையும் அவ் அடிவருடி
சனங்கள் வலியில்லாமல் சாக
சயனைடு வழங்குகிறான்.

வரலாற்றின் கறைபடிந்த பக்கத்தில்
அவ் அடிமையின் பெயர் பதியும்போது
அவன் கைகளில் திணிக்கப்பட்டிருந்த
சனநாயகக் கட்டாரி  
சனங்களின் சிரங்களை குறிவைத்து
வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது.
-------------------------------------------------------------- 

















Blogger Widgets