சீனப் பெருஞ்சுவரை விடவும்
நீண்ட சாதனைப் பட்டியலுக்கு சொந்தக்காரனை
தலைமேல் வைத்து கூத்தாடக் காத்திருக்கும்
மக்கள் மந்தைகளை எதிர்கொள்கையில்
மகேசர்கள் பாதுகாப்பை
பன்மடங்கு பலப்படுத்துகிறார்கள்.
------------------------------
மக்களின் தலைமுறைக் கோபத்திலிருந்து
சிறு சேதமின்றி மீண்டு வந்ததை வைத்தே
அந்த மாநில மாநாடு வெற்றி என்கிறான்.
------------------------------
அரசு மருத்துவமனைகள்
பிறப்பையும், இறப்பையும்
உறுதி செய்கின்றன.
------------------------------
ஒருமுறை கடந்து செல்ல
வேகத்தடை உடைத்து
அவனுக்கு வழி செய்பவன்
அன்றைய பொழுதேனும்
விபத்து நடக்காதென
உத்திரவாதம் அளித்தால்
ஆசுவாசம் கொள்ளலாம்.
------------------------------
ஐந்து கோடி கொடுத்தால்
நீயும் ஆதினம் ஆகலாம்.
முடியும் வச்சுக்கலாம்.
முடியரசியையும் வச்சுக்கலாம்.
------------------------------
சோற்றுப் பொட்டலத்திற்காக சிலநூறு பேரும்,
புட்டிகளிலிருந்து கண் சிமிட்டும்
அரசு மதுவை அருந்த சிலநூறு பெரும்,
கையூட்டு பணத்தை கைக்கொள்ள சிலநூறு பேரும்,
கழுதை மூக்கின் நிறம் காண சில நூறு பெரும்
என கூடியதில் மண்டல மாநாடு களை கட்டியது.
------------------------------
கடவுள் இல்லை.
அவ்வளவு தான்.
வேறொன்றுமில்லை.
------------------------------
ஒரு நாள் விடுமுறைக்குக் கூட உதவாத
கடவுளைக் கட்டிக் கொண்டு நீயே அழு.
எனக்கொன்றும் அவசியமில்லை.
------------------------------
ஒரு இலட்சம் கையூட்டு பெற்று
ஊழலை சிறுமைப் படுத்தியவனுக்கு
நான்கு ஆண்டுகள் கடுங்காவல்.
எண்ணவியலா கோடிகளை கையூட்டு பெற்று
ஊழலைப் பெருமைப் படுத்தியவனுக்கு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு.
வாழ்க சனநாயகம்!
------------------------------
எல்லா நதிகளையும்
வனங்களையும்
விலை நிலங்களையும்
தின்று செரித்தவன்
இனி,
கல்லைத் தான்
மண்ணைத் தான்
தின்னத்தான் வேண்டும்.
------------------------------
சனநாயக நாட்டில் கொலை
செய்வது கூடவா குற்றம்?
நீங்களே சொல்லுங்கள்.
------------------------------
வாழ்தலுக்கான
கணங்களையும்
மனங்களையும்
சேமித்து வைக்காதவன்
பணங்களை மட்டும்
சேமித்து வைத்திருக்கும்
அபத்தத்தை என்னென்று சொல்ல?
------------------------------
கள்ள சாராயத்தை ஒழித்த நல்லவர்கள்
நல்ல சாராயத்தை காய்ச்சி விற்கிறார்கள்.
வாங்கி ஊற்றிக் கொள்ளுங்கள்.
------------------------------
பயணச் சீட்டெடுக்க தயங்கி
குழந்தைகளின் வயதை
குறைத்துச் சொன்ன தாய்மார்களை
தங்களின் உண்மை வயதை உரக்கச் சொல்லி
திக்கு முக்காட வைக்கின்றன குழந்தைகள்.
------------------------------
No comments:
Post a Comment