Sunday, August 14, 2011


எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துணை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் இந்த இக்கட்டான வரலாற்று சூழலில் தனது அரசியல், சமூக போராட்ட கட்டமைப்புகளை பிஞ்சு நிலையில் பெற்று இருக்கும் தமிழர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் இந்த அடக்குமுறைகள், கொலைகள் நம்மை எவ்வாறு கையறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை கவனிக்க முடியும். இந்த முறையில் இன்று தமிழக அரசியல் போராளிகளின் மீது கடும் தாக்கத்தையும் துயரத்தையும் ஏற்பட்டுத்தி இருப்பது தோழர்.பேரறிவாளன், தோழர்.முருகன், தோழர்.சாந்தன் ஆகியோர் மீது திணிக்கப்பட்டு இருக்கும் மரணதண்டனை. 

கொலை செய்யப்பட்டவர் முன்னாள் பிரதமர் என்கிற ஒரே காரணத்திற்காக நீதியை மறுத்து இருக்கிறது இந்த அரசு. சோடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதலில் தூக்கில் இடப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 13பேர் ஈழத்தமிழர்களாகவும் 13 பேர் இந்திய-தமிழகத் தமிழ்ழர்களாகவும் இருக்கும் படி பார்த்துக் கொண்டது அரசு. பிறகு தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட 4 பேரில் இருவர் தமிழகத் தமிழர்களாகவும், 2 பேர் தமிழீழத்தமிழர்களாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டது. செய்யாத குற்றத்திற்காகவும், நிரூபணம் ஆகாத குற்றச்சாட்டு ஒன்றிற்காகவும் இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மத்திய அரசால் அவர்களது உயிர் பறிக்கபட இருக்கிறது.

எந்த ஒரு அடிப்படை சட்ட வழிமுறையும் பின்பற்றப்படாமல் மெளனமாக்கப்பட்ட இந்த அப்பாவிகள், கதவிடுக்கில் சத்தமில்லாமல் பலியிடப்படும் சுவர் பல்லிகளாய், பலியிடப்பட காத்து இருக்கிறார்கள். எந்தவித கவனமும் இல்லாமல் விபத்தாய் இந்த படுகொலை நடக்கப் போகிறது. ஆனால் இது விபத்து அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எந்தவித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூக்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.
தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். ஆசியாவிலேயே யூத இனத்திற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் விரிந்து நிற்கக் கூடிய தமிழ்ச் சமூகம் தன் இனத்திற்கு நடக்ககூடிய அநீதியை தட்டிக் கேட்க வீதிக்கு உலகம் முழுவதும் வந்து நிற்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தால் சர்வதேசச் சமூகத்தில் அவமானத்தை பரிசாக பெற்றுக்கொள்ளும் நிலை இவர்களுக்கு வரும் என்பதை முகத்தில் அறைந்து உரைக்கவேண்டும். திரு. பேரறிவாளன் , திரு. முருகன் , திரு. சாந்தன் அவர்களின் விடுதலை பெற்றுத்தரக் கூடிய ஒரு போராட்டத்தை நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தப் போராட்டம் தமிழத்தினை விட்டு வெளியேவும் நடக்க வேண்டும்.

சர்வதேச அரங்கில் இந்த அநீதிக்கான போராட்டம் நடக்கும் பட்சத்தில் இந்திய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும். தமிழர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி தன்னையும், சிங்களத்தையும் காக்க நினைக்கும் இந்தியம், நமது ஒருங்கிணைந்த போராட்டத்தினால் நிலைகுலையும். இந்தியாவின் தன் மரியாதையை உலக அரங்கில் இழக்கும் இந்த சமயத்தில், அதன் நேர்மையும் காந்திய முகமூடியும் கிழிக்கப்படும். இது நமக்கு இந்த சமயத்தில் அவசியமானதும், தேவையானதுமான ஒன்று. உலகெங்கும் உள்ள தமிழர்கள் தம் இனம் காக்க ஒன்று கூடி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக புலம் பெயர் உறவுகளே உங்களுடைய போராட்டத்தினை பதிவு செய்யங்கள். இவர்களின் நியாயங்களை உலகெங்கும் உள்ள பத்திரிக்கைகளில், ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். நிறைவு பெறாத விசாரணை, பாதியில் முடிக்கப்பட்ட கமிசன்கள், ஒத்து ஊதும் ஊடகங்கள் ஆகியவற்றால் தவறாக முடிவுற்ற இந்த வழக்கினையும், இந்திய அரசின் நேர்மையின்மையையும் காட்டுங்கள். இந்தப் பஞ்சமா பாதகத்தினை செய்ய முனையும் இந்திய காங்கிரஸ் அரசின் தூதரகத்தின் முன்போ அல்லது முக்கியப் பகுதிகளையோ தேர்ந்தெடுத்து போராடலாம். இந்தப் போராட்டத்தின் அவசியம் நம் தமிழ் நிரபராதிகளை தூக்கில் போடப்பட கூடாது, இந்த அப்பாவிகள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே தூக்கிலேற்றப்படுகிறார்கள். 


தமிழனுக்கு உலகில் எம்மூலையில் துன்பமும், அநீதியும் விளைவிக்கப்பட்டால் தமிழர்கள் நாம் ஒன்றாய் நிற்போம். புலம் பெயர் தமிழர்களே களம் காணுங்கள் நம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக. அனைத்து அமைப்புகளும், உணர்வாளர்களும் இணைந்து வரும் ஆகஸ்டு 20 ம் தேதி நாங்கள் சென்னையில் பாரி முனை அருகில், கலெக்டர் ஆட்சியகம் முன்னால் லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுகிறோம். வரும் 18ம் தேதி வியாழன் 2000 இருசக்கர வாகனங்களில் வேலூரை நோக்கிய பிரச்சாரப் பயண்ம். நீங்களும் கை கோருங்கள்.உங்கள் புலம் பெயர் நாடுகளில் இந்த அப்பாவிகளுக்காய் ஒன்று கூடி உரக்கக் குரல் கொடுங்கள்.. மேற்கத்திய எழுத்தாளர்கள், அறிஞர்கள், போராளிகள், அரசியல் அறிஞர்கள் என அனைவரின் ஆதரவினையும் சேகரித்துக் கொடுங்கள். தமிழராய் ஒன்று கூடுவோம். நாம் வெல்வோம்.

நன்றி.

மே பதினேழு இயக்கம்.
9444146806, 9600781111, 9884877487, 9094817952.

No comments:

Blogger Widgets