Saturday, November 12, 2011

கோலங்கள்

முடி காணிக்கை    
-----------------------------------------------  

நன்றி கடனுக்காக  
உயிரைக் கொடுக்கலாம்.     
ஆனால்,  
மயிரைக் கொடுக்கலாகாது. 
------------------------------------------------ 

கள்ளக்காதல் 
-------------------------------------- 

முற்றும் துறந்தவர்கள் 
தோலோடு தோலுரச,     
ரத்த உறவுகளை 
ஈக்கள் மொய்க்கின்றன. 
-------------------------------------  

சில நேரங்களில்...
 ---------------------------------------------------- 

சில பிறப்புகள் 
அழுது புலம்பவும்,  
சில இறப்புகள் 
ஆனந்தக் கூத்தாடவும் 
வைக்கின்றன. 
----------------------------------- 

தெருக்கூத்து 
------------------------------------- 

கால் வயித்துக்கும் 
கஞ்சியில்லாத  
கதைச் சொல்லி,  
கதை சொல்லித் தான்  
கலை வாழுது. 
---------------------------------- 

கனவு காணுங்கள்  
--------------------------------------------------- 
 
ஒருவேளை 
அணுசூழ் உலகில்  
மனித மந்தைகள் 
அழிவதாக கனவு 
காணச் சொன்னானோ?
---------------------------------------------- 

அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். 
 ---------------------------------------------------- 

அறிவுசீவிகள்  
எல்லாவற்றையும் 
பார்த்துக் கொள்ளட்டும்.   
சமூக ஆர்வலர்கள்  
களமிறங்கிப் போராடட்டும்.  
செய்தி ஊடகங்கள் 
எதிர்வினையாற்றட்டும்.   

மக்களே!  
நமக்கு சோறு முக்கியம். 
நமக்கு தூக்கம் முக்கியம். 
------------------------------------------ 
 
அந்திமம் -------------------------- 

தமிழனைக் கொன்று    
தமிழ் வாழுமென்று 
பொய்யுரைத்து மகிழ்வர். 
தமிழ் செழித்தோங்குவதாக 
மாநாடு நடத்துவர். 
தை முதல் நாளை  
தமிழ் புத்தாண்டென்பர். 
தமிழ்ச் செம்மொழியென்பர். 

அவர்கள் ஆட்சியில் தான் 
தாய்மொழி பேசியதற்காக   
பள்ளியில் அபராதம் விதிப்பர். 
பத்து வார்த்தைகள் பேசினால்  
எட்டு வார்த்தைகள் 
அன்னியமொழியே 
ஆட்சி செலுத்தும். 
உச்ச நீதிமன்றத்தில் 
தாய் மொழிக்கெதிராக 
மெட்ரிக் தமிழர்  
வழக்குத் தொடர்வர். 

தமிழினி விரைந்து சாகும். 
------------------------------------------------ 
                                           
                             - அகரத்தான்.
Blogger Widgets