Sunday, October 9, 2011

சொல்ல மறந்த கதை

 தமிழன் என்றோர் இனமிருந்தது.
தனியே அதற்கோர் வனமிருந்தது.
அந்த தொல் இனத்தின் அரசன்
இறையாண்மை மிக்கதோர்
ஆட்சியை பேணிக் காத்தான். 

அங்கு குடிகளின் வாழ்வு
செழித்து மலர்ந்திருந்தது. 
அடர் வனத்தில் ஊடுபாவியிருந்த வெளிச்சம் 
அவர்களுக்கு போதுமானதாயிருந்தது. 
அங்கு வசிக்கவும் புசிக்கவும் எல்லாமிருந்தன.

ஒளி சூழ் உலகை வழங்க வந்த சிலர்
வனம் கொளுத்தி குளிர் காய்ந்தனர்.
வஞ்சகத்தின் துணையுடன் அரசனையும்,
அரசையும் வீழ்த்தி கொக்கரித்தார்கள்.
எரிந்த வனத்தில் சூரியன் இரவிலும்
சுட்டெரிப்பதாய்ச் சொல்கிறார்கள்.

அந்த சாம்பல் பூத்த காடுகளுள்
கனன்றிருக்கும் நெருப்பு,
காற்று வீசும் ஒரு பருவத்தில்  
பற்றி எரியுமெனவும், 

அப்புறம், அந்த சுவாலைகள்
அணைக்க இயலாமல் போகுமெனவும், 
அதில் வனம் கொளுத்தியவரின் 
இனமழிந்து போகுமெனவும்   

நிலாவில் அமர்ந்திருக்கும் பாட்டி
குழந்தைகளுக்கு கதை சொல்கிறாள். 
-------------------------------------------------------------------------

1 comment:

Karthick said...

Hey ur post are too nice.. u done a good job.. Keep it up..
"BE PROUD TO BE A TAMILAN"

--KarthickKSR--

Blogger Widgets