Saturday, October 15, 2011

வெட்ட வெளிதனில்...

வீட்டுக்கு வந்ததும் கும்மாளமிடும் 
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்  
வகுப்பறையில் ஆசிரியரின் முகம் கண்டு  
களைத்து மயங்கிச் சரிகின்றன. 
---------------------------------------------------------------
எல்லோரையும் சிரிக்க வைக்கும் 
எங்களூர் குதிரைக்கார பூச்சியண்ணன்   
பூச்சி மருந்தை உட்கொண்டதில்,  
பெருக்கெடுத்த மல சலத்தில்  
வயிற்றிலிருந்த 
பூச்சிகளெல்லாம் செத்து மிதந்தன. 
------------------------------------------------------------------- 

ஊழல் வழக்கில் உள்ளேயிருக்கும் 
எதையும் தாங்கும் இதயங்கள்,  
கொசிக்கடி தாள இயலாமல் 
கதறுவதாக கொசுறுத் தகவல். 
------------------------------------------------------ 

தேர்தலுக்கு முன் 
கொள்ளைப் பணத்தில் 
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணத்தில் கொஞ்சம் கரைந்தது. 

தேர்தலுக்குப் பின் 
கருவூல வெள்ளைப்பணத்தில்  
அள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணம் மலைபோல உயர்ந்தது. 

முன்னது சட்டப்படிக் குற்றமாம்.  
பின்னது மக்கள் நலத் திட்டமாம். 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------

ஒரு துறையின் நிபுணத்துவம் பேண 
தகுதியும் தேர்வுமுறைகளும் தேவை 
மேலாண்மை செய்யவோ    
ஒரு மயிரும் தேவையில்லை. 
வாழ்க சனநாயகம்! 
---------------------------------------------------- 

தார்ச்சாலைக் கதகதப்பில்  
வாகனங்களுக்கு இரையாகும்  
அரவங்களும், 
நடமாடும் 
அரசுக் கருவூலங்களும். 
----------------------------------------------- 

எல்லோரும் கவிதை எழுதுவதால்  
வாக்கியங்களை மடக்கிப் போட்டு 
நானும் உரை எழுதி, 
கவிதை என்கிறேன். 
பழகிய பாவத்திற்காக பொறுத்தருள்வீர். 
--------------------------------------------------------------  

                                  - அகரத்தான்.  

No comments:

Blogger Widgets