தேர்தல் படுத்தும் பாடு
------------------------------
அப்பா இறந்தபோது
துட்டி கேட்க வராதவர்கள்
அம்மா மனச்சிதைவிலிருந்தபோது
ஆறுதல் சொல்லாதவர்கள்
விபத்தில் காயமுற்றபோது
நலம் விசாரிக்காதவர்கள்
நம் காலுக்கு செருப்பாய்
உழைக்க மன்றாடுவது
தேசபக்தியன்றி வேறில்லை.
------------------------------
சனநாயகப் படுகொலை
------------------------------
எவ்வளவு காவல்கள்?
எவ்வளவு இராணுவப் படைகள்?
எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்?
எவ்வளவு கண்காணிப்புகள்?
அவ்வளவையும் மீறி
இவ்வளவு திருடர்கள்.
------------------------------
ஆறுதல் கடைகள்
------------------------------
கண்ணாடி சீசாக்களில்
அடைபட்டிருக்கும்
அலாவுதீனின் பூதங்கள்
வாடிக்கையாளர்களின்
மனச் சிக்கல்களை
ஆற்றுப் படுத்துகின்றன.
அரசு கடைகள் இப்போது
ஆறுதல் கடைகளாகி விட்டன.
------------------------------
நாடு நலம் பெற...
------------------------------
மக்கள் நலத் திட்டங்களுக்கு
அரசின் நிதியாதாரம் பெருக
மணல் விற்கலாம்.
மது விற்கலாம்.
கஞ்சா விற்கலாம்.
அபின் விற்கலாம்.
எராயின் விற்கலாம்.
பிரவுன் சுகர் விற்கலாம்.
------------------------------
காசே தான் கடவுளடா...
------------------------------
கடவுள் தரிசனமென்று
கல்லாக் கட்டுகிறார்கள்
கடவுளின் முகவர்கள்.
ஐநூறு ரூபா முன் வரிசையிலும்
இருபது ரூபா பின் வரிசையிலும்.
------------------------------
ஓடு சுமக்கும் நத்தை
------------------------------
வேலைக்கு மலைத்தவன்
வேலை செய்தான்.
வேளா வேளைக்கு
உணவுத் தேவை தீர்க்க
ஆண் மகவு பிறந்தது.
------------------------------
கடவுளின் மொழி
------------------------------
மகிழ்ச்சிக்கும் துயருக்கும்
மொழி தேவையில்லை.
கடவுளிடம் முறையிட மட்டும்
சமசுகிருதம் இருந்தால் போதுமானது.
------------------------------
- அகரத்தான்.
3 comments:
நறுக் நறுக் நறுக் என ஒவ்வொன்றும் ஆழமான சிந்தனைகள்..
நச் கவிதைகள்! அருமை!
நன்றி தளிர் & குணசேகரன் அவர்களே
Post a Comment